மதுரை: கிராமப்புறங்களில் கோயில் திருவிழா நடத்த காவல் துறை அனுமதி அவசியம் இல்லை  என்று கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள்,  ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால்தான், காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்  என தெரிவித்து உள்ளது.

கோயில் திருவிழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போலீஸ் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்,  விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழா பல ஆண்டுகளாக எந்த பிரச்சனையுமின்றி சுமுகமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோவில் பொங்கல் திருவிழாவை ஆகஸ்ட் 19 முதல்  20 வரை நடத்துவதற்கு திட்டமிட்டு,  காவல்துறையிடம் அனுமதி கோரினோம்.  இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை.  எனவே, திருவிழா நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.” என  கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ” கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்பிருந்தாலோ, ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு  காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்றால் போதும். இந்த வழக்கை பொறுத்தவரை கிராம மக்கள் அனைவரும் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருகின்றனர். எனவே, சட்ட ஒழங்கு பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை” எனக் கூறி திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கி வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.