ராய்ப்பூர்: காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் வழங்கி ராய்ப்பூரில் நடைபெற்று வரும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதை கட்சி தலைவர் கார்கே தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார்.  இன்றைய கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை.

சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு  இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்று இணைப்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், காங்கிரஸ் கட்சியில் நடத்தப்பட்ட கட்சி தேர்தல், தலைவர் பதவிக்கு தேர்தல் மூலம் மல்லிகார்ஜூன கார்கே  தேர்வு செய்யப்பட்டது மற்றும் ராகுலின் ஒற்றுமை யாத்திரை,  மற்றும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வே விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று முதல் கூட்டமாக வழிகாட்டுதல் குழு கூட்டம், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில், காங்கிரஸின் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய, காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் வழங்க ஒருமனதாக முடிவு செய்தது. இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, ராய்ப்பூர் மாநாடு காங்கிரஸுக்கு வழிகாட்டும் என கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது டிவீட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை கட்சி தலைவர் கார்கே நியமிக்கப்படுவதால், அதற்கான தேர்தல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.