சென்னை: கோவை வெடிப்பு விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் பயங்கரவா அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ள நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், பெரோஸ், நவாஸ் இஸ்மாயில், உமர் ஃபரூக், பெரோஸ்கான் ஆகிய 5 முக்கிய குற்றவாளி களை  கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலை கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக  மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. அந்த காரில் வந்த பயங்கரவாதி ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், அந்த கார் வெடிகுண்டு வைக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. மேலும்,  ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட போது காவல் துறையினர் 75 கிலோ வெடி மருந்துகள், சில சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால், இந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் செயல் என ஊர்ஜிதம் செய்யப்பட்டது. மேலும், அங்கு கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் மூலம் மேலும் பல பகுதிகளில் கார் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்ன்ர கோவை கார் வெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் நடத்திய புலன் விசாரணை முடிக்கப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளும் ஒப்படைக்கப்பட்டன.  தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உதவ 2 ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையில்,  கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர் எனவும், முபின் ஒரு மதத்தை மட்டும் குறிவைத்து, நினைவுச் சின்னங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும் தெரியவந்தது. மேலும் இதற்காக அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவேன் என உறுதிமொழியும் எடுத்துள்ளார் எனவும், இதற்கு கைது செய்யப்பட்ட 6 பேர் உடந்தையாக இருந்து சதி செயலில் ஈடுபட்டதாகவும், ஆன்லைனில் வெடிபொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து ஜமேசா மூபினின் தீவிரவாத செயலுக்கு உதவியதாக முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ் கான் ஆகிய 3 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி ஆகிய இருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்கள் செயல்களுக்கு தயாராகும் வகையில் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், ஆசனூர், கடம்பூர் ஆகிய வனப்பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கூட்டம் நடத்தியதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட உமர் பாரூக் நடத்திய இக்கூட்டத்தில் ஜமேசா முபின், முகமது அசாரூதின், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி பங்கேற்றதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்  இவர்களை அவ்வப்போது தேசிய புலனாய்வு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஹ

இதற்கிடையில்,  உயிரிழந்த ஜமீஷா முபினின் மனைவியிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.  அதையடுத்து,  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், பெரோஸ், நவாஸ் இஸ்மாயில், உமர் ஃபரூக், பெரோஸ்கான் ஆகிய 7 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து. கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.