புனே:

மும்பையில் புத்தாண்டு கொண்டாடிய தம்பதிகளை தாக்கிய சத்ரபதி சிவாஜி மகராஜ் அமைப்பை சேர்ந்த 6 பெண்கள் உள்பட15 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

புனேயை சேர்ந்தவர் ஷாலினி பல்லவ் ஜாலா. 36 வயதாகும் இவர் உடல் பயிற்சியாளர். மும்பை விசாப்பூர் கோட்டை பகுதியில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திய புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் நள்ளிரவில் கணவர், அவருடன் பணிபுரியும் தம்பதிகளுடன் கலந்துகொண்டார்.

இது குறித்து பல்லன் ஜாலா கூறியதாவது:


மதியம் 3.30 மணிக்கு கொண்டாட்டம் நடந்த முகாமில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தோம். மேலும், அங்கு 40 குடும்பத்தினர் வந்திருந்தனர். அன்று மாலை தீ மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்தோம். அப்போது குச்சிகளுடன் 6 பெண்கள் முகாமுக்குள் நுழைந்து எங்களை அசிங்கமாக திட்டினர். நாங்கள் மது குடித்ததாகவும், போதை பொருட்கள் பயன்படுத்தியதாகவும் நினைத்துக் கொண்டு எங்களை அடித்தனர். நாங்கள் தம்பதியர் என்று கூறியும் தாலியை காட்டச் சொல்லினர். இதன் பின்னரும் எங்களை அடித்து துன்புறுத்தினர்.

இதன் பின்னர் 9 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் எங்களுடன் இருந்த ஆண்களின் ஆடைகளை அவிழ்த்து குளிர்பானங்க¬ ஊற்றினர். சிவாஜி மகராஜ் வாழ்த்து கோஷங்களை எழுப்ப அவர்கள் கட்டாயப்படுத்தினர். இவர்கள் லொனவாலா கோட்டை பகுதியை சேர்ந்த சத்ரபதி சிவாஜி மகராஜ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரசிகா என்ற பெண் மீதும்,அனுமதியின்றி முகாமுக்கு ஏற்பாடு செய்த பிரதீக் தாஸ்குப்தா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்ப்டடுள்ளது.