தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் ஒருவர் நேற்று இரவு மும்பையில் உள்ள கர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது இரண்டு வாலிபர்கள் அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

தனியாக நடந்து சென்று கொண்டிருந்த யூ-டியூபரை கையைப் பிடித்து இழுத்த ஒரு வாலிபர் அவரை தங்களுடன் பைக்கில் வருமாறு கட்டாயப்படுத்தியதோடு அவருக்கு முத்தமும் கொடுத்தான்.

தென் கொரிய பெண் தனக்கு இந்தி தெரியாததால் அவர்களிடம் ஆங்கிலத்தில் மறுப்பு தெரிவித்து தான் வந்தவழியாக பின் திரும்பி சென்றார்.

இதனை புரிந்துகொள்ளாத இளைஞர்கள் மீண்டும் அவரை பின் தொடர்ந்து வந்து மும்பையின் முக்கிய வீதியில் இரவு எட்டு மணிக்கு பலர் முன்னிலையில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பெண் தனது யூடியூப் சேனலில் நேரலை செய்து கொண்டிருந்ததால் நடைபெற்ற இந்த சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சியுற்றனர்.

இந்த வீடியோ உடனடியாக சமூக வலைத்தளங்களில் வைரலானது இதனைத் தொடர்ந்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்களை இன்று காலை கைது செய்தனர்.