எம்.எல்.ஏ. ஓட்டின் விலை ரூ. 25 கோடி..

ராஜஸ்தான் மாநிலத்தில் 3 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

அந்த மாநில எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் காங்கிரஸ் சார்பில் 2 எம்.பி.க்களையும், பா.ஜ.க.சார்பில் ஒரு எம்.பி.யையும் தேர்வு செய்ய முடியும்.

காங்கிரஸ் 2 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

2 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள பா.ஜ.க., தனது இரண்டாவது வேட்பாளரை ஜெயிக்க வைக்கக் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பா.ஜ.க. வலையில் வீழ்ந்து விடாமல் தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், அந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசை ஆதரிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கட்சி மாறி ஓட்டளிக்க ஒரு எம்.எல்.ஏ.வுக்கு 25 கோடி ரூபாய் வரை தருவதற்குப் பேரம் நடந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல் –அமைச்சர் அசோக் கெலாட் திடுக்கிடும் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

‘’ வாக்களிக்கும் முன்பாக 5 முதல் 10 கோடி ரூபாய் வரை முன்பணமாகத் தருவதாக சில எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் நடந்துள்ளது’’ என்றும் அவர் கூறியுள்ளார்.