சென்னை; அமைச்சர்கள், அதிகாரிகள் மெத்தனமாக இருக்கக் கூடாது என வடகிழக்கு பருவமழை எதிர்கொளவ்து தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை  வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறுதுறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடர்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம். முக்கிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம். இதன் மூலமாக இந்த முறை சென்னை நகரில் முக்கிய பகுதிகளில் மழைதேங்காது என்று நான் ஓரளவிற்கு நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன். மேலும் அதை வேளையில் தேங்காது என்று நீங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது.

பருவ மழையை எதிர்கொள்வதற்கு போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போல ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் மழைக்காலத்திற்கு முன்பே ஓரிரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று அதை பார்வையிட வேண்டும்.

அந்த மாவட்டத்தில் தங்கி பள்ளி கட்டடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்யுங்கள்.  குறிப்பாக பள்ளிக்கூட கட்டடங்களில் நீங்கள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மழை காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்களும், வருவாய் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளும் தனித்தனியாக இயங்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அரசு துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் அது நல்ல பலன் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒவ்வொரு மாநகராட்சி பகுதியிலும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கடந்த முறை வானிலை எச்சரிக்கை தகவல்களை குறித்த காலத்தில் பெறுவதில் தாமதங்கள் காணப்பட்டது.  அதனை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு உரிய காலத்தில் வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து சரியான தகவலை பெறுவதோடு தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் அளிக்கக்கூடிய தரவுகளையும், வருவாய்த்துறையினர் ஒப்பிட்டு அதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மக்களுக்கான அறிவிப்புகளை நீங்கள் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினார்.