சங்கரன்கோவில்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் இன்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு  செய்தார். அங்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான  பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற  கோவில்களில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இந்த கோவிலில் கும்பாபிஷே கம் நடத்த திட்டமிட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று அமைச்சர்  சேகர்பாபு சங்கரநாராயண சுவாமி கோவிலில் அமைச்சர்  ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவர்  சங்கரநாராயண சுவாமி கோவிலில்  சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் உள்ள நாகசுனை தெப்பம், தங்கத்தேர், ஆவுடைபொய்கை தெப்பம்   உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்

. மேலும் தங்கத்தேருக்கு முலாம் பூச உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கும்பாபிஷேக பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நாளை நடைபெற உள்ள தெப்பத்திருவிழாவை சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் ஆட்சியரிடம் வலியுறுதியதாக கூறப்படுகிறது.

அமைச்சருடன்,  தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் சதன்திருமலைகுமார், நெல்லை அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, மண்டல இணை ஆணையர் அன்புமணி, சுசீந்திரம் துணை ஆணையர் ஞானசேகரன், சங்கரன்கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.