சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக இன்று ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  உலக அளவில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் பேர்புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுவதுமாக குணப்படுத்திவிடலாமென மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் முன்னோடி நாடாக ஜப்பான் உள்ளது. ஜப்பானில் புற்றுநோய் ஆராய்ச்சி மையங்கள், சிகிச்சை முறைகள் மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவுமுகமை கேட்டுக் கொண்டதால், தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி ஜப்பான் நாட்டின் புற்றுநோய் கொள்கை, ஆராய்ச்சி,சிகிச்சை மற்றும் மருத்துவக் கட்டமைப்புகளை அறிந்துகொள்வதற்காக நான் (மா.சுப்பிரமணியன்), செயலாளர் ப.செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், புற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய குழு 5 நாள் பயணமாக நாளை (இன்று) அதிகாலை ஜப்பான் செல்கிறோம் என்று கூறியிருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50 மாணவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டும் 50 மாணவர்களுக்கான சேர்க்கை முடிந்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

அதன்படி, இன்று காலை அமைச்சர் தலைமையில் மருத்துவர்கள், அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஜப்பான் புறப்பட்டு சென்றனர்.  இந்த குழுவினருடன்,  மத்திய அரசின் பிரதிநிதிகளும்  சென்றுள்ளனர்.

இனி வரும் எதிர்காலத்தில் தமிழக மருத்துவர்களை ஜப்பானுக்கு அனுப்பி சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ள செய்வதற்கு இந்த பயணம் உதவியாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.