சென்னை: எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஆன்மா எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை மன்னிக்காது என ஓபிஎஸ் ஆதரவர் வைத்தியலிங்கம்  தெரிவித்துள்ளார். தீர்ப்பைத் தொடர்ந்து ஒபிஎஸ்-ஐ பல மூத்த தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அதிமுக பிரமுகர்  புகழேந்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு இனிப்பு வழங்கி வாழ்த்து  தெரிவித்தார்.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி ஜெயசந்திரன்  பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று அறிவித்ததுடன், ஜூன் 23ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முந்தைய நிலைமையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.  அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது. ஈபிஎஸ்-ஐ இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு 30 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்  எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில்  ஈடுபட்டனர். இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு இனிப்பு வழங்கி, புகழேந்தி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் ‘தொண்டர்களுக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கொடுத்த மரியாதை இந்த தீர்ப்பின் மூலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்திற்கு கலங்கம் கற்பிக்கும் வகையில் தன்னை இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்த எடப்பாடி பழனிச்சாமியை புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா என்றும் மன்னிக்காது என கூறினார்.