தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கட்டாயம் நடைபெறாது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வந்த வேளையில், “இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும்” என்று தெரிவித்து வந்தார் பொன்.ராதா. “பா.ஜனதா இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. “ என்று தெரிவித்தார்.

சமீபத்தில் வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, “ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம், காங்கிரஸும் தி.மு.க.வும்தான். ஆனால் தடைகளை உடைத்து, இந்த முறை ஜல்லிக்கட்டு நடத்த பாஜக அரசு ஏற்பாடு செய்யும்” என்று ஆணித்தரமாக தெரிவித்தார்.

பிறகு, “நான் மத்திய அமைச்சராக இல்லாவிட்டால், ஜல்லிக்கட்டுக்காக சாலையில் இறங்கி போராடியிருப்பேன்” என்றார்.

நேற்று முன்தினம், “ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா மட்டும் காரணமல்ல” என்றார். பிறகு, “அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்தினால் நிரந்தர தடை ஏற்பட வாய்ப்பு ஏற்படும்” என்று கூறி மிரளவைத்தார்.

நேற்று, “இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இன்று மாலை, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுவதற்கு சாத்தியம் இல்லை, இதற்கு பகிரங்கமாக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

ராதா எத்தனை ராதாவோ!