சென்னை: மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி  தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம் என முதலமைச்சர் வாழ்த்தியுள்ளார்.

 உலகம் முழுவதும் உள்ள பெண்களை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ந்தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது. பெண்களின் சாதனைகளை நிலைநிறுத்துவது, சவால்களை அங்கீகரிப்பது, பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தில் அதிக கவனம் செலுத்துவது போன்றவை இந்த நாளின் நோக்கமாகும்.

உலக மகளிர் தினத்தையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்” என்று பாலினச் சமத்துவத்துக்காக முழங்கிய பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் எனது உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதலமைச்சராக நான் இட்ட முதல் கையொப்பமே பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் இலவசப் பேருந்து திட்டத்துக்காகத்தான். முதல் நிதிநிலை அறிக்கையிலேயே, உலகின் முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத வகையில், மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம். அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40விழுக்காட்டுக்கு உயர்த்தி எல்லா அலுவலகங்களிலும் ஆண்களுக்குச் சமமாகவும், ஆண்களை மிஞ்சியும் மகளிர் பணிபுரியும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

தொடர்ந்து மூவலூர் மூதாட்டி இராமாமிருதம் அம்மையாரின் பெயரால் பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தையும் தொடங்கி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம். அதுமட்டுமின்றி, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் வீடுகள் குடும்பத்தலைவிகளின் பெயரிலேயே வழங்கப்படும் என்ற ஆழ்ந்த அக்கறைமிகு அறிவிப்பினையும் கடந்த ஆண்டு மகளிர் நாள் அன்று அறிவித்தேன்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களையும், நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்து சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியு ள்ளோம். நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 50 விழுக்காடு வேலைவாய்ப்பு அளிப்பதை நடைமுறைப்படுத்தியுள்ளோம். புதிய சிப்காட் தொழிற்பேட்டைகளில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பெரிய மாநகராட்சிகள் உள்ளிட்ட 11 மாநகராட்சிகளைப் (50 விழுக்காட்டுக்கும் மேலாக) பெண்களுக்கு ஒதுக்கி, அவர்கள் இன்று வணக்கத்துக்குரிய மேயர்களாகச் செயலாற்றும் நிலையை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும், ஒதுக்கப்பட்ட 50 விழுக்காட்டுக்கும் மேல் பெண்கள் தலைவர்களாகவும், துணைத் தலைவர்களாகவும், கவுன்சிலர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர் என்பது இதுவரை இல்லாத சாதனை ஆகும்.

மகளிருக்கு எதிரான வன்முறைகள் – குற்றங்களை ஒழிப்பது, அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவது, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் சம உரிமையை நிலைநாட்டுவது ஆகிய உயர் இலட்சியங்களை அடைவதற்கு “தமிழ்நாடு அரசின் மகளிருக்கான புதிய கொள்கை”யும் விரைவில் இறுதிசெய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது.

அதன் வழியாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில், குடும்பத்தலைவர்களாக உள்ள பெண்களுக்குக் கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது, முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது எனப் பெண்களின் முன்னேற்றத்துக்கான பல சீரிய திட்டங்களை நமது அரசு செயல்படுத்த எண்ணியுள்ளது என்பதையும் இந்த மகளிர் நாள் செய்தியில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம். பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவதுதான் திராவிட மாடல் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம்.

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெண்ணினக் காவலர் கலைஞர் அவர்களும் பெருமை கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறோம், இனியும் பல திட்டங்களை நாட்டிற்கே முன்னோடியாக நிறைவேற்ற உள்ளோம். “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு, மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே!” என்பதை நன்குணர்ந்து பெண்ணடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம்!

அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈடு இணையற்ற சிறப்புகளைக் கொண்ட மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்க வேண்டும். அத்தகைய கனவு சமுதாயத்தை உருவாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை. அந்தக் கடமையை நிறைவேற்ற உலக மகளிர் நாளான இந்த நன்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “அன்பும், அறமும் மனிதர்களிடம் தழைத்தோங்க உயிர் கொடுக்கும் பெருமைமிகு தாய்மையை எந்த நாளும் போற்றுவோம் என்ற செய்தியுடன் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அதேநேரத்தில் அவர்களைச் சுதந்திரமாக செயல்படவும் அனுமதிக்க வேண்டும் எனவும், பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படாமல் அவர்களைப் பாதுகாப்பதற்கு இந்த நாளில் உறுதி ஏற்போம். மேலும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “இன்றைய 21 ஆம் நூற்றாண்டு கணினி யுகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கின்றது. தமிழ் இனத்தின் வரலாற்றில் பெண்கள் உன்னதமான மதிப்பைப் பெற்றிருக்கிறார்கள். பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் மகளிருக்கு, உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுவதே மகளிரை அடிமைப்படுத்தும் செயல் தான். ஆண்கள் தான் சாதிக்கப் பிறந்தவர்கள். பெண்கள் அவர்களுக்கு உதவுவதற்காக பிறந்தவர்கள் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் இது.

பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்துத் துறைகளிலும் சாதிப்பார்கள். அதற்கு அண்மைக்காலங்களில் அவர்கள் படைத்துள்ள சாதனைகள் தான் சான்று. இதை உணர்ந்து பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்க அனுமதிக்க வேண்டும்; அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் ஆண்கள் துணை நிற்க வேண்டும் என்ற உறுதிமொழியை மகளிர் நாளான இந்த நாளில் நாம் அனைவரும் ஏற்க வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,” சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் மார்ச் 8 அன்று மகளிர் நலன் காக்கப்படும் வகையில் மனித இனம் செயல்பட வேண்டும். உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் மகளிருக்கு எதிரான குற்றச்செயல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். பெண் குடும்பத்தை வழி நடத்தி செல்வதால் அக்குடும்ப உறுப்பினர்கள் சமுதாயத்தில் நல்வாழ்க்கை வாழ முடிகிறது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழ் பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் மன நிம்மதியாக, மகிழ்ச்சியாக, குடும்பத்திற்காக, நாட்டிற்காக தாங்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பான பணியை தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள இறைவன் துணை நிற்க வேண்டி, மகளிர் தின நல்வாழ்த்துகளை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் “பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக பணியிடங்களில் நடைபெறும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நிர்பயா நினைவாக நிறைவேற்றப்பட்ட பணியிட பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் அமலாக்கப்படுவதில்லை என்ற நிலையில் நடப்பாண்டு பெண்கள் தினத்தில், பாலின வேறுபாடுகளையும், அடக்குமுறைகளையும் ஆதரித்து வரும் வகுப்புவாத சக்திகளின் கரங்களில் சிக்கியுள்ள நாட்டின் அதிகாரத்தை மீட்கும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து, முன்னேறுவோம் என உறுதி ஏற்று, பெண்கள் அனைவருக்கும் சிபிஐ வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது”என குறிப்பிட்டுள்ளார்.