சென்னை,

பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் மாறன் சகோதரர்கள் டிமிட்டி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக கோபமடைந்த  நீதிபதி அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து, விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

அடுத்த விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார்.

தயாதி மாறன் மத்திய தொலைதொடர்பு துறைஅமைச்சராக இருந்தபோது,  முறைகேடாக பி.எஸ்.என்.எல். அதிவேக இணைப்புகளை சன் தொலைக்காட்சிக்கு சட்ட விரோதமாக வழங்கிய தாகவும், அதன் காரணமாக, அரசுக்கு ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அவர்கள் ஒருவரும். ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் தொடர்புடைய  முன்னாள் அமைச்சர்   தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குரூப் அதிபருமான கலாநிதி மாறன், சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் எம்.பி. வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.  இந்த வழக்கின் விசாரணை சென்னை 14-வது சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 3ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரும் ஆஜராகினர்.

இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் தரப்படும் என்றும், அதன் காரணமாக அனைவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது,  சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை பெறுவதற்காக மாறன் சகோதரர்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. தயாநிதிமாறனின் சிறப்பு தனிச்செயலாளர் கவுதமன் உள்பட ஒருசிலர் மட்டுமே இன்று நீதிமன்றம் வந்தனர்.

இதனால் கோபமடைந்த நீதிபதி, விசரணைக்கு ஆஜராகாத மாறன் சகோதரர்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.  அடுத்த விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.