மரக்காணம்; 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் பள்ளியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்  தென்நெற்குணம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல் (வயது 45). இவர் அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்1 மாணவி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் மாணவி பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லாமல் இருந்துள்ளார். இதனால், அந்த மாணவியிடம் பெற்றோர் வற்புறுத்தி விசாரித்தபோது, ஆசிரியரின் அத்துமீறல் குறித்து தெரிவித்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ஆசிரியரை தனியாக அழைத்து விசாரித்தபோது, அவரும் தவறை ஒப்புகக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் பெற்றோர், தலைமை ஆசிரியரை சந்தித்து சம்பவம் குறித்து கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறியுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் டிஎஸ்பி அருண்  பள்ளி நிர்வாகத்திடமும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினால், அப்போது ஆசிரியர் தவறை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து,   கோட்டகுப்பம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் ஆசிரியரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.