சென்னை:

மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு  அளிக்கும் என்று கட்சி தலைவர் ஜவாஹிருல்லா  அறிவித்து உள்ளார்.

ஜவாஹிருல்லா

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுகவின்  கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி, தங்களுக்கும் திமுக இடம் ஒதுக்கும் என எதிர்பார்த்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், தற்போதைய நிலையில், இடம் இல்லை என்றும் சட்டமன்ற தேர்தலில் பிரதிநிதித்துவம் அளிக்கப் படும் என்றும் திமுக தலைமை கூறியது.

இதனால், மனித நேய மக்கள் கட்சி  அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து  செயற்குழு கூடி முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  திமுக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஜவாஹிருல்லா, திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள  21 தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்கான இடங்களை கேட்டு திமுகவிடம் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.