கோலாலம்பூர்: ஊழல் வழக்கு காரணமாக  மலேசியா முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டு உள்ளார்.  ஏற்கனவே ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு முன்னாள் பிரதமரான முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மலேசியாவின் ஊழல் தடுப்பு  நிறுவனம், மார்ச் 9, ( வியாழன்) அன்று நாட்டின் முன்னாள் பிரதமர் முகைதின் யாசினைக் கைது செய்தது. அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி தொடர்பான சட்டங்களின் கீழ் யாசின் மீது அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசியாவில் 2020 முதல் 2021 வரை பிரதமராக பதவி வகித்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முகைதீன் யாசின் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மொஹைதின் யாசினை கைது செய்வது தொடர்பாக அட்டர்னி ஜெனரலிடம் கலந்தாலோசிக்கப்பட்டு, அவரது ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அந்த ஆணையம் தெரிவித்தது.

ஜன விபாவா என்ற நிதியுதவித் திட்டத்தை தாம் பிரதமராகப் பதவி வகித்தபோது அறிவித்துச் செயல்படுத்தினார் மொஹைதின் யாசின். கொரோனா தொற்று விவகாரத்தால் பாதிக்கப்பட்ட மலேசிய மண்ணின் மைந்தர்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், முகைதீன் யாசினை ஊழல் வழக்கில்  போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் ஊழல் வழக்கில் 20 ஆண்டுகளும், பணமோசடி செய்ததற்காக 15 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது.

பதவியை விட்டு விலகிய பின்னர் குற்றம் சுமத்தப்படும் 2-வது பிரதமர் முகைதீன் யாசின் ஆவார். ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமரான நஜீப் ரசாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.