மும்பை:

மும்பையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதில், ‘‘மறைந்த நடிகை ஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்தது யார்?’என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அளிக்கப்பட்ட பதிலில்,‘‘ முதல்வர் அலுவலக உத்தரவின் அடிப்படையில் நடிகை ஸ்ரீதேவிக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பிப்ரவரி 25ம் தேதி மும்பை நகராட்சி கமிஷனர் மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் இதற்கான அரசு உத்தரவை பெற்றுள்ளனர்.

6 ஆண்டுகளில் இதுவரை 41 பேருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர்கள் விலாஸ்ராவ் தேஷ்முக், ஏ.ஆர்.அந்துலே, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உள்பட பல முக்கிய பிரபலங்களும் அடக்கம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.