சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், , 5 முக்கிய சிவாலயங்களில் கலைநிகழ்ச்சிகளுடன் விடிய விடிய விழா நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, திருக்கோயில்கள் சார்பில் இறையன்பர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் சமயம் சார்ந்த விழாக்களும் சிறப்பாக ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.

2022 – 2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது “சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா கடந்த ஆண்டு வெகுசிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்களின் அமோக வரவேற்பினைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் 5 சிவாலயங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா நடத்தப்படும்” என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், கோவை, பேரூர், அருள்மிகு பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழா நடத்தப்படவுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் இந்தாண்டு திருக்கோயில்கள் சார்பில் கொண்டாடப்படவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அமைச்சர்,  மகா சிவராத்திரி பெருவிழா நடைபெறவுள்ள அரங்குகளை இறை உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமைத்தல், இறையன்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், பக்தர்கள் பயன்பெறும் வகையில் மங்கள இசை, சமய பெரியோர்களின் அருளாசி, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பக்தி இசை, பட்டிமன்றம், இசை சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துதல், பழங்கால இசைக் கருவிகளை அரங்குகளில் காட்சிப்படுத்துதல், ஆன்மிக புத்தக  விற்பனை நிலையம் அமைத்தல், பிரசித்தி பெற்ற திருக்கோயில்களிலிருந்து பிரசாதங்களை பெற்று விநியோகித்தல் போன்ற பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இதர துறைகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு, பக்தர்கள் மகிழ்ச்சியடைந்து பாராட்டும் அளவிற்கு சிறப்பாக செய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.