சென்னை:
நாளை ஒரு நாள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாய நடைமுறை இதுவாகும். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இந்தக்கட்டடம் கலைநுட்பமாக கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் கட்டடத்திற்கு நீதித்துறையோ, சட்டத்துறையோ சொந்தம் கொண்டாடக் கூடாது எனவும், பழமையான இந்தக் கட்டடத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த சம்பிரதாய நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமை நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் பூட்டப்படுகின்றன. அவற்றின் சாவிகள் உயர் நீதிமன்றத்தின் ஓவர்சீஸியர் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்தச் சம்பிரதாய நடைமுறைப்படி டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 8 மணி வரை கதவுகள் பூட்டப்பட்டு இருக்கும். இந்த நாளின் வெளியாட்கள், போலீசார் என யாரும் உள்ளே செல்ல முடியாது. அதே போல் ஏற்கெனவே பாதுகாப்பு பணியில் இருக்கும் சிஐஎஸ்எப் வீரர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவதில்லை எனவும் கூறப்படுகிறது.