தஞ்சாவூர்: விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்  இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன்,  தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளும் இடையே நடைபெற்ற போரில், விடுதலை புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரன் சிங்கள ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.  வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. இதை, முன்னாள் விடுதலைப்புலிகளின் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுதி செய்தனர்.

ஆனால், சிங்க கட்சிக்கு ஆதரவாக செயல்படும், முன்னாள் விடுதலைப்புலி தலைவர் கருணா என்பவர்,  பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதுபோல மற்றொரு தலைவரான கேபி என்பவரும், இறுதிக்கட்டத்தின்போது, நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனும் அவருடன் இருந்தவர்களும் மிக வீரமாகவும் கடுமையாகவும் சண்டையிட்டார்களாம். இதில் இறுதி நேரம் வரை சற்றும் பின்வாங்காமல் பிரபாகரன் சண்டையிட்டே வீர மரணம் அடைந்துள்ளார் என ராணுவம் கூறயதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று  தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் பிரபாகரன் உயிருடன் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சர்வதேசச் சூழலும், இலங்கையில் ராஜபட்ச ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.  பிரபாகரன் குடும்பத்தினருடன் தொடர்பு உள்ளது என்றும், அவரது அனுமதியோடுதான் இந்த தகவலை தெரிவிக்கிறேன் என்றார்.

இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார்.

தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.

இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார்.

தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது கவிஞர் காசி ஆனந்தன், உலகத் தமிழர் பேரமைப்பு துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன், வழக்கறிஞர் அ. நல்லதுரை உள்பட பலர்  உடனிருந்தனர்.