சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27-ந்தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும்.

இது அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 26, 27-ந்தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

28, 29-ந்தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.