டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு காலை தொடங்கியது. அவை தொடங்கியதும், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்.பி.க்களும், அதானி விவகாரத்தை கையில் எடுத்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டதால்,  இரண்டாவது நாளாக மக்களவை இன்று மதியம் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

‘நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஆளும் கட்சி வலியுறுத்தி யது. மேலும் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் அமளிக்கு பிறகு நேற்று இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து இன்று தொடங்கிய மக்களவையில், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கியதும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினர். எதிர்கட்சியினரும், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது தொடர்பாக வலியுறுத்தினர், இதனால் இரு தரப்பினரிடையே தொடர்ந்து முழக்கமிட்டு வந்ததால் கேள்வி நேரத்தை தொடர முடியாமல், சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை மதியம் 2மணி வரை ஒத்திவைத்துள்ளார்.

அதுபோல ராஜ்யசபாவிலும் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால்,  அவை மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.