சென்னை:  தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டுள்ள அபராத வசூல் ரூ.19.67 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 7 கட்டமாக ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்,  ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் இதுவரை (ஆகஸ்டு 4ந்தேதி),

உரிய அனுமதியின்றி வெளியே சுற்றியதாக, 6,66,669 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 9,38,125 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 8,52,515 லட்சம் வழக்குகள் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் (ஆகஸ்டு 4ந்தேதி மட்டும்) ஒரே நாளில் 952 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.   2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது வரையில், ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து  ரூ.19.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.