பாட்னா

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பாஜக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு வரை பிஹார் முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார்.   அவரது  ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்குத் தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து ரூ. 950 கோடி பணம் மோசடியாகப் பெறப்பட்டது என புகார் எழுந்தது.

இது தொடர்பாகப் பல வழக்குகள் தொடரப்பட்டு இதுவரை 5 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 19 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது. இம்முறை, அரசுப் பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் யாதவ் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று சம்பூர்ண க்ராதி திவஸை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், “ஆளும் பாஜகவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது நாடு உள்நாட்டுப் போரை நோக்கி நகர்கிறதோ எனத் தோன்றுகிறது.  இந்த வேளையில் மக்கள் பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, ஊழல் ஆகியனவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும்.  நாமெல்லோரும் ஒன்றிணைந்து போராடினால் தான் வெற்றி கிட்டும்.” எனப் பேசி உள்ளார்.