தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்றிரவு மரணமடைந்தார்.

இவரது உடல் இன்று பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா.

2009 ம் ஆண்டு வித்யாசாகரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். தெறி உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார் நைனிகா. திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நடித்து வந்த மீனா சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரது கணவர் வித்யாசாகர் அதிலிருந்து மீண்டார்.

இருந்தபோதும் நுரையீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.

நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார், அவருக்கு வயது 48.

இதனைத் தொடர்ந்து வெளியான செய்தியில் கொரோனா காரணமாக அவர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு “வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார். கொரோனா காரணமல்ல, பத்திரிக்கைகள் மக்களிடையே தேவையில்லாமல் கொரோனா பயத்தை மீண்டும் உருவாக்காமல் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.