கோத்தகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு சாட்சிகள்  2 பேரிடம் உதகை  காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டு எஸ்டேட்டில் அவரது மறைவுக்கு பின்னர், கொலை, கொள்ளை நடைபெற்றது. கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி, நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து,  நீதிமன்றத்தில் கடந்த ஆட்சியின்போது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், திமுக ஆட்சி பதவி ஏற்றதும்,  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள், இப்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர்மீது குற்றம் சாட்டி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இப்போது  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையில் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் அரசு சார்பில் சேர்க்கப்பட்டுள்ள 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்  அரசுத்தரப்பு வழக்கில் 36-வது சாட்சியாக உள்ளார்.

அதுபோல, 38வது அரசு தரப்பு சாட்சியான அனிஷிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனிஷிடமும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.