நீலகிரி: கோடநாடு வழக்கின் விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி கொள்ளை நடந்தது. இதில் கோடநாடு எஸ்டேட்டின் காவலா ளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மறு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சசிகலா உள்பட இதுவரை 316 பேரிடம் மறுவிசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர், சீல் வைக்கப்பட்ட 1,500 பக்கம் கொண்ட விசாரணை ஆவணங்களை நீலகிரி மாவட்ட கோர்ட்டில், நீதிபதி முருகனிடம் தாக்கல் செய்தனர்.

இதேபோல் மற்றொரு நகல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கோடநாடு எஸ்டேட்டில், சிபிசிஐடி டிஜிபி முகமது ஷகில் அக்தர் தலைமையிலான அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். முன்னதாக, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்ட இடத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், எஸ்டேட்டின் மேலாளர் நடராஜ், பணியாளர்கள், சம்பவம் நடந்த தினத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த ஓம்பகதூரின் சொந்த மாநிலத்துக்கு சென்றும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் உதவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போதுரு, இந்த வழக்கில் சயான், வாளையார் மனோஜ் ஆஜராகினர். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை  ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்த்தார்.