திருப்புவனம்,

திருப்புவனம் அருகே கீழடியில் மூன்று கட்ட அகழாய்வு பணி நடந்து முடிந்த நிலையில், பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில்,4வது கட்ட அகழ்வராய்ச்சி பணிக்கு ரூ.55 லட்சம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக கீழடியில் மீண்டும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருபுவனம் அருகே உள்ள கீழடி பகுதியில், கிடைத்த பழங்கால பொருட் களை ஆய்வு செய்தபோது, அவைகள்  சுமார்  2,300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக தெரிய வந்துள்ளது. அந்த  பொருட்கள் அனைத்தும் கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.

சுமார் 100 ஏக்கருக்கும் மேலான தொல்லியல் திட்டுகள் கீழடி அகழாய்வு பகுதியில் உள்ளன என்று கூறப்பட்டது. ஏற்கனவே 3 கட்ட அகழ்வராய்ச்சி பணிகள் நடந்து வந்தன. ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் அகழாய்வு பணி சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது.  3 கட்ட அகழ்வராயச்சி  முடிவடைந்துள்ள நிலையில்,  தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டதோடு, தொல்லியல் அதிகாரிகளும் கூடாரங்களை காலி செய்துவிட்டு சென்றனர்.

இதன் காரணமாக கீழடி குறித்து மேலும் ஆராய்ச்சி நடைபெறுமாக என்பதில் சந்தேகம் ஏற்பட்டது. தமிழக அரசியல் கட்சியினரும் கீழடியில் முழுமையாக அகழ்வராய்ச்சி செய்ய வேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கீழடி பகுதிக்கு வந்த தமிழக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், கீழடி குறித்து  4ம் கட்ட ஆய்வு நடைபெறும் என்று உறுதி அளித்தார்.

இந்நிலையில், கீழடி 4ம் கட்ட அகழாய்வுக்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு ஆணை பிறபபிக்கப்பட்டுள்ளது.

இந்த 4ம் கட்ட அகழ்வாய்யு, இங்கு ஏற்கனவே  அகழாய்வு நடத்திய சிவானந்தம் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து நடத்துவார்கள் என கூறப்படுகிறது.