சென்னை: கீழடியில் கட்டப்பட்டுள்ள ‘அகழ் வைப்பகம்’ செட்டிநாடு கலை நயத்துடன் ரூ.11.03 கோடி மதிப்பீட்டில்  கட்டப்பட்டு உள்ளது. இது வரும்  5-ந்தேதி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட  இருப்பதாக  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பகுதியில் பல ஆண்டுகளாக அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை 8 கட்ட அகழாய்வு  பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, 9 ஆம் கட்ட அகழாய்வை தொடா்வது குறித்து தமிழகஅரசு முடிவு செய்யும் என தொல்லியல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையில், கீழடி அகழ்வாயின்போது, கண்டெடுக்கப்பட்டுள்ள  பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த அகழ் வைப்பகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கீழடியில் சுமார்,  2 ஏக்கர் பரப்பளவில் ரூ.11 கோடியே 3 லட்சம் செலவில்  அகழ் வைப்பக்கம் கட்டப்பட்டு  வந்தது. பழமை மாறாமல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏற்ப மர வேலைப்பாடுகளும் செய்யப்பட்டு்ள்ளன. செட்டிநாடு கட்டுமான பாணியில் தேக்கு மரங்களால் தட்டு ஓடுகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி தீ எச்சரிக்கை கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இது தற்போது முடிவடைந்து, திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.

இந்த அகழ்வைப்பகத்தில்,  உலோக பொருட்கள், மண்பாண்ட பொருட்கள், பழங்கால கட்டிட மாதிரிகள், காதணிகள், தங்க பொருட்கள் ஆகிய வற்றுக்கு தனித்தனி கட்டிடங்களுடன் இந்த அகழ் வைப்பகம் கட்டப்பட்டு உள்ளது. கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்கள், 2600 ஆண்டுகளுக்கு முந்தயவை என அறிவிக்கப்பட்டு்ள்ள பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்து.

இந்த அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி மாலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை பார்வையிடுவதுடன், காட்சிப்படுத்தப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களையும் பார்வை யிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.