டெல்லி: கீழடியை முதன்முதலாக ஆய்வு செய்த  தொல்பொருள்ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர், அதில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் ஆய்வுகள்படி,  கீழடி,   சங்ககால தளம், அதாவது சங்க காலத்தை சேர்ந்தது என என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளதாக, சுமார் 900 பக்கம் கொண்ட ஆய்வு அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்ப்பித்துள்ளது.

வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம். இது  சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

சிந்து , கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய், சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.

இங்கு அகழ்வாவு நடத்துவதை மத்தியஅரசு நிறுத்திய நிலையில், நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு ஆச்சரியமூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இந்த நிலையில், கீழடி அகழ்வாய்வு பணிகளை மேற்கொண்ட, பிரபல தொல்லியல் துறைஆய்வாளர் அமர்நாத் ராமகிஷ்ணா, கீழடி ஆய்வு குறித்து சுமார் 900 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை மத்தியஅரசிடம்  சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் தொல்லியல் துறையின் முதல் இரண்டு கட்ட அகழ்வாராய்ச்சிகள் குறித்த 900 பக்கங்களுக்கும் மேலான ஒரு பெரிய அறிக்கையை ASI அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழுவினர்  டெல்லியில் உள்ள தொல்லியல் துறை  இயக்குநர் ஜெனரல் வி வித்யாவதியிடம் சமர்ப்பித்துள்ளனர்.

மொத்தம்  982 பக்க அறிக்கையை படங்கள் மற்றும் அகழிகளின் விரிவான வரைபடங்கள் மற்றும் முதல் இரண்டு கட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்கள் குறித்த அறிக்கையுடன் இது சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதில்,  ஏன் கீழடி சங்க காலத் தளமாக இருந்தது என்பதை ஆதாரங்கள் மூலம் நிரூபித்துள்ளது, அது நகர்ப்புற தொழில்மயமான குடியேற்றமாக இருந்தது. கார்பன் டேட்டிங் பகுப்பாய்விற்காக 23 மாதிரிகள் பீட்டா அனலிட்டிகல் லேப் மற்றும் நாட்டிலுள்ள பிற நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன.

மேலும்,  கீழடியில் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட அமர்நாத் தலைமையிலான தொல்லியல் குழுவினர், அதை ஒரு வருடத்தில் முடித்தனர், இது ஒரு சாதனை  என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 2வது கட்ட அகழ்வாய்வையும் மேற்கொண்டனர்.  அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களை ஆய்வு செய்தபோது, கீழடி சங்க கால தளம் என்று கூறினார்.  அவரது ஆய்வறிக்கை தமிழர்களின் பண்டைய கால பாரம்பரியத்தையும், புத்தி கூர்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

இதனால், 3ம் கட்ட அகழ்வாய்வு பணிக்கு அனுமதி அளிக்காத அப்போதைய மத்திய  அரசு, கீழடியில் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற கூறி,  அவரை (அமர்நாத்)  அஸ்ஸாமுக்கு  மாற்றியது. இது தமிழர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மற்றொரு குழுவினரை கொண்டு ஆய்வு நடத்திவிட்டு, அங்கு ஏதும் கிடைக்கவில்லை என்று கூறி அதை மூட முயற்சித்தது.

ஆனால்,  இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையை (டிஎன்எஸ்டிஏ) நான்காவது கட்டத்திலிருந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு கூறியதை அடுத்து, சர்ச்சை முடிவுக்கு வந்தது.

இதையடுத்து  மேலும் கிடைக்கும் பொருட்கள், ஆதாரங்கள்  மற்றும் கட்டிங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும்.இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில் சங்ககால மக்களின் தொல் எச்சங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படும் பொருட்கள் அனைத்துமே இங்கே கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளா்களும்,சங்கத்தமிழ் ஆா்வலா்களும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனா்.

சிலப்பதிகாரம், பரிபாடல், மதுரைக்காஞ்சி போன்ற இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்மணிகள் மட்டுமே 600 கிடைத்துள்ளன.முத்துமணிகள்,பெண்களின் கொண்டை ஊசிகள், பெண்கள் விளையாடிய சில்லு,தாயக்கட்டை,சதுரங்க காய்கள்,சிறுகுழந்தைகள் விளையாடிய சுடுமண் பொம்மைகள் ஆகிய சங்க காலம் குறிப்பிடும் பல தொல்பொருட்களும் இங்கு அதிகளவில் கிடைத்திருக்கின்றன.

அதேபோல, இங்கு கிடைத்துள்ள நூல் நூற்கும் தக்ளி, அக்கால மக்கள் நூல் நூற்று ஆடை நெய்து அணிந்து வாழ்ந்திருப்பதை உறுதி செய்கிறது.பட்டிணப்பாலையில் குறிப்பிடப்படும் சுடுமண் உறைகேணிகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகளின் அருகே இக்கேணிகள் அமைக் கப்பட்டிருக் கின்றன.அதிகளவில் செங்கல் வீடுகளும் வீடுகளின் மேற்கூரையில் ஓடுகள் வேயப்பட்டிருந்ததையும் இங்கு கிடைத்துள்ள சான்றுகளின் மூலம் உணர முடிகிறது.

குடிநீா் தேவைக்காகவும், வீட்டின் பிற பயன்பாடுகளுக்காகவும் உறைகிணறு தோண்டும் முறை சங்க காலம் முதல் அண்மைக் காலம் வரை இருந்துவருகிறது.சங்க இலக்கியமான பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை என்ற நூலில் பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியில் உறைகிணறுகள் இருந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டிணப்பாலை நூலாசிரியா் உருத்திரங்கண்ணனார் “உறை கிணற்று புறச்சேரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.அந்த சங்க காலத்தைச் சோ்ந்த உறைகிணறுதான் கீழடி அகழாய்விலும் கண்டறியப்பட்டுள்ளது.வீடுகள் தோறும் குளியலறைகள் இருந்திருக்கின்றன.

இப்பகுதியில் மட்டும் ஒரு டன் அளவிற்கு கருப்பு சிவப்பு மட்கல ஓடுகள் கிடைத்துள்ளன.பல ஓடுகளில் “தமிழ் பிராமி” எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொளுந்தீஸ்வரர் கோயிலில் தமிழ் பிராமி கல்வெட்டுக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தை சோ்ந்த சூது பவள மணிகளும், ரோமானிய நாட்டு அரிட்டைன் வகை மட்கல ஓடுகளும் இங்கு கிடைத்திருக்கின்றன. இது அக்கால மக்களின் வாணிக தொடா்பையும், வணிகச் சிறப்பையும் நமக்கு உணா்த்துகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில் அகழாய்வில் கிடைக்கும் வெள்ளை வண்ணம் தீட்டப்பட்ட மண்பாண்டங்களும், கொங்குப் பகுதியில் மட்டும் கிடைத்த ரசட் கலவை பூசப்பட்ட மண்பாண்டங்களும் இங்கு கிடைத்துள்ளன. ரசட் கலவையின் தாக்கம் இருப்பதைப் பார்க்கும்போது கொங்குப் பகுதியோடு வாணிபத் தொடா்பில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

வரலாற்றின் தொடக்க காலத்திய செங்கல் கட்டிடச் சான்றுகள் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் இங்கு அதிகளவில் செங்கல் கட்டிடங்கள் இருந்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. சங்ககாலத்தில் வைகை நதியின் வலது கரையில் பண்டைய வணிக பெருவழிப்பாதை இருந்துள்ளது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் அழகன்குளம் துறைமுகப் பட்டிணத்துக்கு “கீழடி திருப்புவனம்” வழியாக பாதை இருந்துள்ளது. மதுரைக்கு அருகாமையிலேயே இந்த ஊா் வணிக நகரமாக இருந்துள்ளது.

அழகன் குளத்தில் நடந்த அகழாய்வில் பண்டைய ரோமானிய நாட்டின் உயா்ரக ரவுலட், ஹரிடைன் மண்பாண்டங்கள் கிடைத்தது போன்று கீழடி பள்ளிச்சந்தை புதூரிலும் கிடைத்துள்ளது. அந்த வகையில் அழகன் குளம் துறைமுகப் பட்டிணத்தையும் மதுரையையும் இணைக்கும் இடமாக கீழடி பள்ளிச்சந்தை புதூா் இருந்திருக்கலாம். மேலைநாடுகளுக்கு கடலில் பிரயாணம் செய்யும் வணிகா்கள் இந்த ஊரின் வழியாக சென்றிருக்கலாம். இங்கு கிடைத்துள்ள தடயங்கள், சான்றுகள் இதை உறுதிப்படுத்துகின்றன. அந்தவகையில் இந்த இடம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

முதல்கட்ட ஆய்வில் கிடைத்ததைவிட, இரண்டாம் கட்ட அகழாய்வில் 10-க்கும் மேற்பட்ட சங்ககால கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அக்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் முத்திரை கட்டைகள் (இரப்பா் ஸ்டாம்ப்), எழுத்தாணிகள், அம்புகள் , இரும்பு, செம்பு ஆயுதங்கள், அரிய வகை அணிகலன்கள், 18 தமிழ் எழுத்துக்களுடைய மட்பாண்ட ஓடுகள் உட்பட 5300-க்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. “அரிக்கன்மேடு, காவிரி பூம்பட்டிணம், உறையூா் போன்ற அகழாய்வில் கிடைத்ததைவிட அதிக எண்ணிக்கையில் தொடா்ச்சியாக பல கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

சங்ககாலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழாய்வு மாற்றியமைத்துள்ளது. கீழடியில் கண்டறியப்பட்டுள்ள கட்டிடங்கள் மூலம் ஒரு நகர நாகரீகம் இருந்ததற்கான அத்தனை அடிப்படை ஆதாரங்களும் கிடைத்துள்ளன.தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சுடுமண் முத்திரை கிடைத்தது இதுவே முதல்முறை.

 இங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் மற்றும் அது தொடர்பான ஆய்வுகளின் மூலம், கீழடி 2600 ஆண்டுகள் பழமையானது என்பதுநிரூபிக்கப்பட்டு உள்ளது. அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கீழடி இருந்துள்ளது என்பதும், அங்கு அப்போதே தமிழர்கள் பல்வேறு வகையான கட்டிடங்களை கட்டி வாழ்ந்து வந்துள்ளதுடன், நீர் சேமிப்பு, தானிய சேமிப்பு உள்பட பல்வேறு திட்டங்களை தீட்டி வசித்து வந்துள்ளனர்என்பதற்கான ஆதாரங்களும்  அகழ்வராய்ச்சியில்  கிடைத்துள்ள  பல்வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகி உள்ளது.  இதனால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அதாவது கிமு, கிபி என்பது அழைப்பதற்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்துள்ளதும், அவர்கள் அறிவுக்கூர்மையானவர்கள் என்பதுடன், தமிழர்களின் சங்க கால வாழ்வியலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.