டில்லி:

கார்த்தி சிதம்பம் மீதான சிபிஐயின் லுக்அவுட் அறிவிப்புக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரியிருந்தார். அதையடுத்து, இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்றம் முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

இதன் காரணமாக அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடு தப்பிச் செல்ல  வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்தது. மேலும், அவர் வெளிநாட்டுக்கு செல்வதற்கு நீதிபதிகள் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், பிரிட்டனுக்கு செல்ல தம்மை அனுமதிக்கவேண்டும் என கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் பலமுறை விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரத்தை வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என  மத்திய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரம் கோரிக்கை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என தெரிவித்தனர்.