கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 27

பா. தேவிமயில் குமார்

இட்லித் திருநாள்

“காசு கரியாகுதே”
சொலவடை
நடைமுறையாகிறது

மோதிரமும் மைனர் செயினும்,
மரபான…..
தலை தீபாவளி

பட்டாசு வெடிக்கும்
பையனை
பழைய நினைவுகளோடு
பார்க்கிறான் தந்தை

சாலையோர வியாபாரிக்கும்
உண்டு தீபாவளி
அவனிடமும்
ஏதாவது வாங்குங்கள்!

அதிரசமும் முறுக்கும்
அறிவிக்கப்படாத
புவி (தீபாவளி) சார் குறியீட்டு பலகாரங்கள்

 

அமாவாசை நாளில்
அசைவம்….
அடுக்களையில்

நடை முறையானது
நரகாசுரனை மறந்த
தீபாவளி கொண்டாட்டங்கள்

உரிமம் பெறாத
துப்பாக்கி ,
வெடிக்கிறது!
வீடு தோறும்,

கம்பி மத்தாப்பை
“கண்டு”(மட்டும்)களிக்கவே
காத்திருக்கின்ற
கந்தலாடை குழந்தைகள்

இருப்பவர்க்கு
இனிப்புத் திருநாள்
இல்லாதோர்க்கு
இட்லித் திருநாள்