சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக 36 யுடியூப் சானல்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தைதொடர்ந்து  அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு காரணமாக சமூக வலைதளங்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. சில அமைப்பினர் யுடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே வதந்திகளை பரப்பி வன்முறைக்கு வித்திட்டனர். இதனால்,  வன்முறையாளர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து அங்கிருந்து வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தியதுடன், பள்ளி கட்டிடங்களுக்குள்ளும் புகுந்து தீ வைத்து எரித்தனர். கட்டிடங்களையும் சேதப்படுத்தினர். இந்த விவகாரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பு உள்பட சில அமைப்புகள் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்,  கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வீடியோவாக பதிவிட்ட  36 யூடியூப் சேனல்கள் மீது  4 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களுக்கு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.