மும்பை

சிபிஐ சிறப்பு நீதிபதி பி எச் லோயாவின் மரணம் இயற்கையானது என தனது குடும்பம் ஏற்றுக் கொண்டதாக லோயாவின் மகன் அனுஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ஆம் வருடம் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சோராபுதீன்,  அவர் மனைவி கௌசர், மற்றும் அவருடைய கூட்டாளிகள் துளசிதாஸ்,  பிரஜாபதி ஆகிய  அனைவரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.    காவல்துறையினர் அவர்கள் அனைவரும் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என கூறினர்.   ஆனால் இது ஒரு போலி என்கவுண்டர் எனவும் இதற்கு சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் அப்போதைய அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு இதற்கு தொடர்பு இருந்ததாகவும் புகார் எழுந்தது.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி பி எச் லோயா விசாரித்து வந்தார்.   இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி ஒரு உறவினர் வீட்டு திருமண நிகழ்வுக்காக நாகபுரி சென்றிருந்தார்.   லோயா அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார்.   மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் லோன் இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

இது குறித்து லோயாவின் மகன் அனுஜ், “இந்த மனு குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.   எங்களுக்கு முதலில் என் தந்தை மரணம் மீது சந்தேகம் இருந்தது.   தற்போது எங்களுக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை.   எங்கள் குடும்பத்துக்கு சில ஊடகச் செய்திகளால் பிரச்னைகள் எழுகின்றன.    என் தந்தையின் மரணம் இயற்கையானது தான்.   யாரும்  இது குறித்து மேலும் கேட்டு  எங்களை துன்புறுத்த வேண்டாம்.   தயவு செய்து  எங்களுக்கு தொல்லை தருவஹை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.