மும்பை:

சம்மர் சர்ப்ரைஸ் ஆபர் என்ற புதிய திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் 15ம் தேதி வரை இலவச சலுகைகளை பெறலாம். முன்னதாக மார்ச் 31ம் தேதியுடன் இந்த திட்டம் முடிவடைவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது இதை 15ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

தற்போது அந்நிறுவனத்தில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 70 மில்லியன் பேர் ஜியோ பிரைம் திட்டத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் சம்மர் சர்ப்ரைஸ் ஆஃபரின் ஒரு பகுதியாக மேலும் 3 மாதங்களுக்கு இலவச தேவை தொடரும் என்று ஜியோ அறிவித்துள்ளது. ஜியோவின் இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. பலரும் பல விதமான ச ந்தேகங்களை எழுப்பினர்.அதற்கான விடைகள் இதோ…

ஜியோ சம்மர் ஆபர் என்றால் என்ன?

இதன் மூலம் ஜியோ இலவச சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற வரும் 15ம் தேதிக்குள் ரூ. 99 செலுத்தி பிரைம் உறுப்பினராகி, பின்னர் ரூ. 303 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்து கொண்டால் இந்த சலுகை 3 மாதத்திற்கு கிடைக்கும்.
ஜியோ சம்மர் ஆபரில் என்ன பலன் கிடைக்கும்?

இது புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். அளவற்ற இலவச அழைப்புகள், இலவச எஸ்எம்எஸ், பல அளவு கொண்ட டேட்டாக்களுடன் இலவச 4 ஜி இணைய சேவை ஆகியவை கிடைக்கும்.

பிரைம் உறுப்பினராகி, ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் சம்மர் ஆபர் கிடைக்குமா?

உதாரணமாக ரூ. 99 செலுத்தி பிரைம் உறுப்பினராக இணைந்துவிட்டால் உங்களது செல்போன் நம்பர் குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். அதன் பிறகு இணைப்பு துண்டிக்கப்படும். சம்மர் ஆபரை பெற ரூ. 303 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்வது அவசியம்.

ரூ. 303 செலுத்தினால் சம்மர் ஆபரில் என்ன கிடைக்கும்?

ரூ. 303 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் தினமும் ஒரு 1ஜிபி டேட்டா வரும் ஜூன் 30ம் தேதி வரை கிடைக்கும். நீங்கள் செலுத்திய ரூ. 303 திட்டம் ஜூலை 1ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும். அது ஜூலை 28ம் தேதி வரை செல்லுபடியாகும்.

ஏற்கனவே ரூ. 149 திட்டம் தேர்வு செய்திருந்தால் என்ன ஆகும்?

ரூ. 149 செலுத்தி ரீசார்ஜ் செய்தவர்களுக்கு சம்மர் ஆபர் கிடைக்காது. அவர்கள் மேற்கொண்டு ரூ. 303 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் சம்மர் ஆபர் சலுகைகள் கிடைக்கும். ஏற்கனவே செலுத்திய ரூ. 149 இருப்பில் வைக்கப்பட்டு, 3 மாதங்கள் மற்றும் கூடுதலாக ஒரு மாதம் கழித்து, சம்மர் ஆஃபர் முடிந்தவுடன் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் ரூ. 149 திட்டம் அமலுக்கு வரும்.
சம்மர் ஆஃபர் மூலம் ரூ. 99 மற்றும் ரூ.499 திட்டங்களுக்கு என்ன கிடைக்கும்?

அளவற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி எப்யுபி அளவுடன் 4ஜி டேட்டா கிடைக்கும்,

ரூ. 4,999 அல்லது ரூ. 9,999 திட்டங்கள் தேர்வு செய்திருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

இந்த திட்டங்கள் அனைத்தும் 3 மாதங்கள் கழித்து அமலுக்கு வரும். அது வரை இலவச சேவையை தொடர்ந்து பெறலாம்.

சம்மர் ஆஃபரை பெற மொத்தம் எவ்வளவு செலுத்த வேண்டும்?

ரூ.99 மற்றும் ரூ. 303 என மொத்தம் ரூ. 402 செலுத்த வேண்டும்.
கூடுதலாக 100 ஜிபி திட்டம் குறித்து…

இந்த திட்டம் குறித்து பெரிய அளவில் பேச்சு இல்லை. சம்மர் ஆஃபரின் கீழ் இந்த திட்டத்திற்கும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ. 999 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 3 மாதங்களுக்கு கூடுதலாக 100 ஜிபி டேட்டா பெறலாம்.

அதன் பிறகு ரீசார்ஜ் பலன்கள் கிடைக்கும். இதன் மூலம் ஒருவர் ரூ. 999 செலுத்தி ரீசார்ஜ் செய்தால் 100 ஜிபியுடன் கூடுதலாக 60 ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் மூலம் ஒரு மாதத்திற்கு 90 ஜிபி டேட்டா குறை ந்தபட்சம் 3 மாதங்களுக்கு கிடைக்கும்.