டில்லி,
ஜல்லிக்கட்டு போராட்டம் இன்று வன்முறை போராட்டமாக வெடித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட, அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள் அனைவரும் போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து சேவாக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
‘ தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தங்களது அறவழிப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வைத்து மற்றவர்கள் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சேவாக் ‘தமிழில் அற்புதமான தமிழக மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.