எங்கள் முன்னோர்கள் ஏமாந்தனர்…. நாங்கள் ஏமாற தயாராக இல்லை… இளைஞர்கள் ஆவேசம்….!

சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்து எங்களை ஏமாற்றுகிறது மத்திய, மாநில அரசுகள். எங்கள் முன்னோர்களை ஏமாற்றினார்கள்… ஆனால், நாங்கள் ஏமாற தயாரில்லை என்று இளைஞர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும் என சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஆவேசமாக பேசி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம்; எங்களுக்கு நிரந்தர தீர்வு தான் வேண்டும் என்றும் உறுதியாக தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற அறிவிப்புகளால் எங்களது பாட்டன், முப்பாட்டன் என அனைவர்களும் ஏமாந்து விட்டனர். ஆனால் எங்களை ஏமாற்ற முடியாது என்று இளைஞர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.
இளைஞர்களின் போராட்டத்தை கலைக்க அரசு ஏதேனும் அதிரடி நடவடிக்கை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.