சென்னை,
வரும் 26ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி கைவிடப்படுவதாக அன்புமணி அறிவித்து உள்ளார்.

தமிழகம் முழுவதும் தடையைமீறி வரும் 26ந்தேதி (குடியரசு தினம்) அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று பா.ம.க. ஏற்கனவே அறிவித்து இருந்தது.
தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியிருப்பதால் 26ந்தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் கைவிடப்படுவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் எந்த தடையுமின்றி அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு பிறப்பிக்கப்படவில்லை என்றால் குடியரசு நாளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தேன்.
இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. அத்துடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடத்திக் காட்டப்பட்டிருக்கின்றன.

எனவே, தமிழகம் முழுவதும் குடியரசு தினத்தன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கைவிடப்படுகின்றன. எனினும், பின்னாளில் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து நேர்ந்தால் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் கடுமையாக போராடும்”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.