சென்னை :

அடுத்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முன்னணி ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க விசா பிரச்னை, தள்ளாடும் ரூபாய் மதிப்பு, புதிய நிறுவனங்களால் எதிர்கொள்ளும் போட்டி போன்றவற்றால் இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஐடி துறையில் இந்த ஆண்டு அதிக அளவில் பணிநீக்கம் தொடங்கியுள்ளது. அதிக சம்பளம் பெறும் மூத்த ஊழியர்களுக்கு பாதிப்பு வரும் என்று கூறப்பட்ட நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான கோக்னிசன்ட் ஆயிரம் ஊழியர்களுக்கு 9 மாத சம்பளம் தந்து ராஜினாமா செய்ய அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிறுவனம் மேலும் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு கல்தா கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விப்ரோ நிறுவனம் எதிர்பார்த்த வருவாய் ஈட்டவில்லை மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்காததால் 10 சதவீத ஊழியர்களை இழக்க தயாராகி வருகிறது.

கேப்ஜெமினி நிறுவனம் 9 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியரின் வேலை மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஐடி துறையில் பணியாற்றுவோரில் 20 சதவீதம் பேர் மட்டுமே எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் பணித்திறமை உள்ளவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

2 லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து கடந்த பிப்ரவரி மாதம் ‘நாஸ்காம் இந்தியா லீடர்ஷிப் போஃரத்தில்’ செய்திகள் வெளியானது. இதற்கு ஏற்ப இந்த ஆண்டில் 56 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணியிழக்க நேரிடும். அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் பேர் பணியிழக்க நேரிடும்.

தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தயார்ப்டுத்திக் கொள்ளாத 50 முதல் 60 சதவீத ஊழியர்களின் பணியை பறிக்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.