சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்களில் கடந்த வாரம்  நடத்தப்பட்ட சோதனையில் ரூ.290 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.  பொது விநியோக திட்டத்துக்கு பொருட்கள் வழங்கிய 5 நிறுவனங்களில்  வருவாய் மறைத்து உள்ளது தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அருணாச்சலா இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில், இண்டகிரேட்டட் சர்வீஸ் ப்ரொவைடர், காமாட்சி அண்ட் கோ, ஹைரா டிரேடர்ஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் கடந்த மாதம் (நவம்பர்) 23ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களைக் கொண்டு, சோதனை செய்யப்படும் இடங்கள் அதிகரிக்கப்பட்டது. மொத்தம்,  40 இடங்களில் 4 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக கூறியது.

இந்த நிலையில், சோதனையில் நடைபெற்றது என்ன, எவ்வளவு வரி ஏய்ப்பு என்பது குறித்து வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதில், தமிழக அரசின் ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் நிறுவனங்கள் ப ருப்பு, எண்ணெய் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.290 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மேலும் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அருணாச்சலா இம்பெக்ஸ் ரூ.60 கோடி வரி ஏய்ப்பும்,  பெஸ்ட் டால் மில் ரூ.80 கோடி வருவாயை மறைந்துள்ளதும்,  இண்டகிரேட்டட் சர்வீஸ் புரொவைடர் நிறுவனம் ரூ.150 கோடி வருவாய் மறைப்பு செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.

இந்நிறுவனங்கள்  போலியான ரசீதை தயாரித்து பல கோடிக்கு விற்பனை நடந்துள்ளது தெரிய வந்துள்ளது என்றும்,  தற்போது மறைத்து வைத்துள்ள சொத்துக்கள் எவ்விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? வெளிநாட்டில் ஏதேனும் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரேசன் கடைகளுக்கு பருப்பு பாமாயில் சப்ளை செய்யும் சென்னை நிறுவனம் மற்றும் தொடர்புடைய 40 இடங்களில் ஐடி ரெய்டு!