சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவி வருவதால், வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல் திட்டங்களை தயார் செய்ய வேண்டும் என்று துணை இயக்குநர்களுக்கு தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் கோடைக்காலத்தில் அதிக வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதையடுத்து,  வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான தமிழ்நாடு சுகாதாரத்துறை  வழிகாட்டு நெறிமுறைகளை வெளயிட்டுள்ளது. இதை அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அனுப்பி உள்ளது. அதன்படி,

  • வெப்ப அலையை எதிர்கொள்ள மாவட்ட அளவில் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்.
  • இந்த செயல் திட்டங்கள் மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும்.
  • வெப்பத்தால் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஹ
  • அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு ஆகியவற்றை தினசரி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதீத வெப்பத்தால் சிகிச்சை பெறுபவர்களின் பட்டியல் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பராமரிக்க வேண்டும்.
  • அனைத்து மருத்துவ அலுவலர்களும் வெப்ப பாதிப்புகளை கண்டறிவதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • அதீத வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • ஓஆர்எஸ் பாக்கெட்டுகள், ஐஸ் பேக்குகள் போன்ற அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு வைக்க வேண்டும்.
  • தேவைக்கு அதிகமாக குடிநீர்,குளிரூட்டும் கருவிகள், ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஐஸ் பாக்கெட்டுகளை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • குளிரூட்டும் கருவிகள் மற்றும் இதர சாதனங்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • பொதுமக்கள் அதிக நீர் அருந்த வேண்டும்.
  • முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும்.
  • பழங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை சூரிய வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
  • வெயிலில் செல்ல வேண்டியிருந்தால் குடை, உடலை முழுதாய் மறைக்கும் பருத்தி ஆடைகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
  • சூடு, தோலில் எரிச்சல், ஏற்பட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.