மும்பை: ரத்தத்தில் சர்க்கரையின் அளவை முறையாகப் பராமரிப்பதில் இந்தியர்கள் மோசமான விழிப்புணர்வைக் கொண்டுள்ளார்கள் என்பது சோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது.

மேலும், ‘உலகின் சர்க்கரை நோய் தலைநகரம் இந்தியா’ என்று அழைக்கப்படும் ஒரு மோசமான சூழலும் இருக்கிறது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 3 மாதங்களாக நடத்தப்பட்ட சோதனையில், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு அளவு 8.5% என்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, வழக்கமான கட்டுப்பாட்டு அளவைவிட 3% அதிகம்.

இந்திய நகர்ப்புறங்களில் இந்த ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டு விகிதம் மோசமாக இருக்கிறது. மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் சென்னை ஆகிய எந்த நகரமும் இதற்கு விதிவிலக்கல்ல.

மும்பையில் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு அளவு 8.2% என்பதாகவும், டெல்லியில் 8.8% என்பதாகவும் உள்ளது.
இந்த ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு அளவு பெங்களூரு நகரில் சற்று அதிகரித்த நிலையில், சென்னை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் சற்றே குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், ஐதராபாத், குர்கோன் உள்ளிட்ட நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு அளவு 8% என்பதற்கு மேலாகத்தான் இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

மக்களின் போதுமான அளவு ஓய்வற்ற மற்றும் மனஅழுத்தமுள்ள வாழ்க்கை முறையும், சரியான உணவுப் பழக்கமின்மையும் காரணங்களாக கூறப்படுகின்றன.