ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ராகுல் காந்தி.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று சரத் யாதவ் விருப்பம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, சரத் யாதவ் தனது அரசியல் ஆசான் என்றும் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஊடகங்கள், பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் தலைவர்கள் கடந்த 2 – 3 ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் பல்வேறு உண்மைகளை மறைத்து வருகின்றன.

இலங்கையிலும் அதுதான் நடந்தது, அங்கே இப்போது உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுபோல் இந்தியாவிலும் விரைவில் உண்மை வெளிவரும்.

இதில் ஒரே வித்தியாசம், இந்தியா முன்பு இருந்தது போல் ஒரே தேசமாக இல்லாமல் பல்வேறு குழுக்களாக பிளவுபட்டு நிற்கிறது.

ஒரே நாட்டுக்குள் வெவ்வேறு நாடுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அனைவரும் ஒருவரையொருவர் எதிர்த்து நிற்கிறார்கள் இதனால் வன்முறை வரும்” என்று கூறிய அவர்,

“இப்போது என்னை நம்ப வேண்டாம், இன்னும் 2 – 3 ஆண்டுகள் காத்திருங்கள்” என்று ராகுல் காந்தி எச்சரித்தார்.