சென்னை: கல்வியில், பெண்களுக்கு தனி கவனம் வேண்டும் என சென்னை மாநகர மேயர் பிரியா கூறி உள்ளார். “பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில், தனி கவனம் செலுத்த வேண்டும்; சிறந்த இலக்கை அடைய தொடர்ந்து |முயற்சி செய்ய வேண்டும்; சென்னையில் நடைபெற்ற விழாவில், மேயர் பிரியா கூறினார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பெண்பிள்ளைகளை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேயர் பிரியா கலந்துக் கொண்டு பேசுகையில், ‘’ தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாநகராட்சிகளில் பெரிய மாநகராட்சியான பெருநகர சென்னை மாநகராட்சிக்கு என்னை மேயராகத் தேர்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்தத் தருணத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்கள் தனித்துவமான சிறப்பு வாய்ந்தவர்கள். ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் என்றால் கருவிலேயே அழித்து விடும் நிலை இருந்தது. இந்த நிலை மாறி தற்போது பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். எந்த கடினமான சூழ்நிலை இருந்தாலும் பெண் குழந்தைகளை காணும் போது அவை எல்லாம் மறைந்து மகிழ்வு உண்டாகிவிடும். பெண்கள் அனைவரும் கல்வி கற்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த இலக்கை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்’’.

இவ்வாறு பேசினார்.