atharva-nayanthara

சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தரும், சில திரைப்படங்கள் அவர்களுக்கு காதலை ஏற்படுத்தும்….இன்னும் சில திரைப்படங்கள் அவர்களை வயிறு குலுங்க சிரிக்க செய்யும்….ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை இருக்கையின் நுணியில் அமர செய்து, அவர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும்… அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து வருவது தான் அதர்வா – நயன்தாரா – ராசி கண்ணா – பிரபல வில்லன் அனுராக் காஷ்யப் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’. ‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், கேமியோ பிலிம்ஸ் சி ஜெ ஜெயக்குமாரின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாக இருக்கின்றது.

“தமிழ் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் முக்கியமான நாளாக கருதப்படுவது வெள்ளிக்கிழமை தான்…. வாரம் முழுவதும் தங்களின் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை திரைப்படங்கள் மூலமாக வழங்குவது வெள்ளிக்கிழமைகள் தான். அந்த காரணத்தினால் தான் நாங்கள் எங்களின் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பை இந்த உற்சாகமான நாளில் ஆரம்பிக்க இருக்கிறோம். ரசிகர்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட விடாமல், சுவாரசியத்தின் உச்சிக்கே எங்களின் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது…” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘கேமியோ பிலிம்ஸ்’ சி ஜெ ஜெயக்குமார்.