டெல்லி: சென்னையில் இருந்து மீண்டும் ஹஜ் பயணம் புறப்படும் வகையில்,  ஹஜ் பயணத்துக்கான புதிய கொள்கை திட்டத்தை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதனால் பயணி ஒருவருக்கு ரூ.50ஆயிரம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக, இஸ்லாமியர்களின் புனித பயணத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னையில் இருந்து நேரடியாக ஹஜ் வரை நடைபெற்ற விமான சேவையும் நிறுத்தப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இரந்து   ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு கூடுதலாக செலவினம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,  சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செல்ல மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பாண்டில் புனித ஹஜ் பயணத்திற்கான புறப்பாடு இடங்களில் சென்னையும் சேர்க்கப்பட்டுள்ளது.  மேலும், ஹஜ் பயணத்துக்கான இடங்களில் 80 சதவீதம் ஹஜ் கமிட்டிகளுக்கும் 20 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஹஜ் கமிட்டி மூலம் பயணம் மேற் கொண்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாது.

ஹஜ் பயணத்துக்கான ரூ.300 மதிப்பிலான விண்ணப்பம் நடப்பாண்டு இலவசமாக வழங்கப்படும்.

ஹஜ் கமிட்டி இணையதளம் அல்லது செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு செய்யப்பட்டவர்களிடம் மட்டும் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

பயணிகளின் திட்ட செலவு மதிப்பீட்டில் ரூ.50 ஆயிரம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு ஆண் துணை (மஹ்றம்) செல்பவர் இல்லையென்றாலும் அவர்கள் குழுவாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தனியாக தங்கும் இடம் அளிக்கப்படும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அல்லது உறவினர்கள் செல்வதாக இருந்தால் ஒரே தொகுப்பாக விண்ணப்பிக்கலாம்.

பயணிகள் உடல் நலம் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அந்த பரிசோதனை மத்திய அரசு மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டும்.

ஹஜ் பயணிகளுக்கு அருகே உள்ள விமான நிலையங்களில் இருந்து புறப்பட இடம் ஒதுக்கப்படும்.

சென்னை, கண்ணூர், கொச்சி, விஜயவாடா, ஐதராபாத், பெங்களூரு, அகமதாபாத், லக்னோ, அகர்தலா, கோழிகோடு, கொல்கத்தா, மும்பை, டெல்லி, நாக்பூர், ஜெய்ப்பூர், வாரணாசி, அவுரங்காபாத், கோவா, மங்களூர், போபால், இந்தூர், கவுகாத்தி, கயா, ராஞ்சி, ஸ்ரீநகர் ஆகிய 25 விமான நிலையங்களில் இருந்து பயணிகள் புறப்படலாம்.

அனைத்து மாநிலங்களிலும் இருந்து இயக்குனர் அளவிலான அதிகாரி ஹஜ் பயணிகளின் உதவிக்காக செல்லலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.