காந்திநகர்: குஜராத்தின் முதலமைச்சராக பூபேந்திர பட்டேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்  12ந்தேதி பதவி ஏற்பார், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் கலந்துகொள்வார்கள்  பாஜக மாநில தலைவர்  சி.ஆர்.பட்டில் தெரிவித்துள்ளார்.

182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது.  இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. மாலை 5.30 மணி வரை நிலவரப்படி 156 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில், 126 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 92 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில், தற்போதுவரை பாஜக 126 தொகுதிகளில் வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. மேலும் 30 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடித்தும், மேள தாளங்களை இசைத்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க,  வருகிற திங்கள் கிழமையில் பதவியேற்பு விழா நடைபெறும் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பூபேந்திர பட்டேல் தான் மீண்டும் குஜராத்தின் முதலமைச்சராக இருப்பார் என அம்மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பட்டில் தெரிவித்துள்ளார். வருகிற திங்கள் கிழமை நடைபெரும் பதவியேற்பு விழாவில் பூபேந்திர பட்டேல் மீண்டும் குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிவித்துள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.