குஜராத்:
குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

89 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடு இன்று செய்யப்பட்டுள்ளது. 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் முழு முனைப்புடன் களம் இறங்கி இருக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் இடையே கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து மும்முனை போட்டி நிலவுகிறது. இவர்களில், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள்.

இன்று தேர்தலை சந்திக்கிற முக்கிய வேட்பாளர்கள் பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இசுதான் காத்வி (கம்பாலியா), மாநிலத்தலைவர் கோபால் இதாலியா (கட்டர்காம்), கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா (ஜாம்நகர் வடக்கு பா.ஜ.க.) இடம்பெற்றுள்ளனர். 7 முறை எம்.எல்.ஏ. பதவி வகித்த பழங்குடி இனத்தலைவர் சோட்டு வசவா (ஜாகடியா-பாரதீய பழங்குடி கட்சி), 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பர்சோத்தம் சோலங்கி (பாவ்நகர் ஊரகம்-பா.ஜ.க.) ஆகியோரும் இன்று தேர்தலை சந்திக்கிறார்கள்.

இன்று முதற்கட்ட தேர்தல் நடக்கிற தொகுதிகளில் 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3,311 நகர்ப்புறங்களிலும், 11 ஆயிரத்து 71 கிராமப்புறங்களிலும் உள்ளன. 89 மாதிரி வாக்குச்சாவடிகளும், முற்றிலும் பெண் ஊழியர்கள் பணியாற்றும் 611 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 வாக்காளர்கள் வாக்கு அளிக்க உள்ளனர்.