சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதா  ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சுமார் 4 மாதங்களுக்கு பிறகு, பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொள்வோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒராண்டில் 44பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு ஆன்லைன் தடை மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது .முன்னதாக,  ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டத்தை கொண்டு வர முயன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து, அதன் அறிக்கையை பெற்று, அதன் பரிந்துரையின் பேரில்,  கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை இயற்றியது.

இதனை தொடர்ந்து அந்த சட்ட மசோதா ஆளுநர் ஆர்என் ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் அதற் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தினார். . ஆளுநரின் இந்த காலதாமதத்தை சுட்டிக்காட்டி பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆன்லைன் ரம்மியால் இதுவரை 44 பேர் இறந்துள்ள நிலையில், தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி அனைத்து கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.ஆனால், அதை கண்டுகொள்ளாமல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூறி வந்தார்.

இதற்கிடையில் மசோதா குறித்து சில கேள்விகளை தமிழ்நாடு அரசுக்கு கேட்டிருந்தார். அதற்கும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் கொடுக்கப்பட்டது. இருந்தாலம், அதில் திருப்தி அடையாமல்   சுமார் 4 மாதங்களுக்கு பிறகு, சிலகேள்விகளை எழுப்பி, அதில் திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளது.

மேலும், அதில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வரும் விவகாரம் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை கட்டுப்பாட்டில் வருவதாக இருப்பதால், மாநில அரசு தனியாக சட்டம் இயற்ற முகாந்திரம் இல்லை என்று அவர் கூறியிருப்பதுடன், இந்த மசோதா சட்டப்படி எப்படி சாத்தியமாகும்? என சில கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் அளிக்கும்படி தமிழகஅரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.