புதுக்கோட்டை: தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் தாமதம் செய்வதற்கு காரணம் தெரியவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்து உள்ளர்.

ஆன்லைன் ரம்பி தடை சட்டம் தொடர்பான அவசரம் காலாவதி ஆன நிலையில், தமிழக அரசின்  ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் கடந்த வாரம் இந்த மசோதா தொடர்பாக அவர் எழுப்பிய சந்தேகத்துக்கு தமிழகஅரசு பதில் அனுப்பி உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்பி தடை சட்ட மசோதாவுக்கு    ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்காமல்  காலதாமதம் செய்து வருகிறார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இன்று  புதுக்கோட்டையில் இன்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றிக் கொடுத்து நேற்றுடன் அதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. அவசர காலத்து சட்டத்திற்கு உடனடியாக ஆளுநர் ஒப்புதல் தந்தார். அதிலுள்ள அதே சரத்துக்கள் தான் சட்ட முன்வடிவுத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. சில சந்தேகங்கள் கேட்டவுடன், 24 மணி நேரத்திற்குள் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. நேற்று மாலைக்குள் அதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. அதை தெளிவுபடுத்த தான் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். உலக சுகாதார நிறுவனம் ஆன்லைன் ஒருவித நோய் என்று அறிவித்துள்ளது. இந்த நோயை ஒழிக்க வேண்டியது நமது தலையாய பணி. இந்த பணியைத்தான் தமிழக அரசு செய்துள்ளது.

தமிழகஅரசு எல்லாவிதமான, முறையான பதில்களையும் ஆளுநரிடம் அளித்துள்ளது. இதில் காலதாமதப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஏன் ஆளுநர் காலதாமதப் படுத்தகிறார் என்பது தெரியவில்லை. அதற்கான காரணம் அவருக்குத்தான் தெரியும். தற்போது அமலில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் தான், இனிமேல் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்க முடியும்” என்று தெரிவித்தார்.